வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 பெயர்கள் நீக்கம்

மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கம்: ரிஷாட் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

by Staff Writer 15-01-2021 | 10:14 PM
Colombo (News 1st) மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7,727 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து வந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொத்தணி வாக்களிப்பு முறை ஊடாக தமது மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதிகமானவர்களின் வாக்காளர் பதிவை, அதிகாரிகள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கியுள்ளதாக ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வாக்காளர் பதிவு நீக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் தற்பொழுது வாக்குகள் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அவர்களது வாக்குகளை மீள அந்தந்த கிராமங்களில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.