MTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

by Staff Writer 13-01-2021 | 7:06 PM
Colombo (News 1st) MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இலக்கம் 6 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று நிராகரித்துள்ளார். இதற்கிணங்க, மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெலவினால் இலக்கம் - 01 நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு கடந்த 08 ஆம் திகதி மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதானகேவிற்கு இந்த வழக்கை மாற்றுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ​கோரிக்கை விடுத்ததுடன், ஆரம்பத்தில் ஒருதலைப்பட்ச தடையுத்தரவு அவரினால் பிறப்பிக்கப்பட்டமை மற்றும் கடந்த மாதம் 07 ஆம் திகதி அவரினால் தடையுத்தரவு நீடிக்கப்பட்டமை ஆகிய விடயங்களை அடிப்படையாக வைத்து இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த ​கோரிக்கையை MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கடுமையாக ஆட்சேபித்தார். வழக்கு தரப்பினருக்கு தேவையான விதத்தில், சிந்தனைக்குப் புலப்படும் வகையில், வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதிகளை தெரிவு செய்வது மிகவும் தவறான முன்னுதாரணம் எனவும் அதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் 7 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கை கடந்த மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மற்றுமொரு மேலதிக மாவட்ட நீதிபதியொருவர் உத்தரவிட்டு வழக்கை இலக்கம் - 01 நீதிமன்றத்தில் ஜனவரி 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அதற்கு முறைப்பாட்டாளர் தரப்பு அந்த வேளையில் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையெனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அதனால் உரிய நீதிமன்ற செயற்பாட்டை பின்பற்றி, மாவட்ட நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் முறைப்பாட்டாளர் தரப்பு கோரிக்கை விடுப்பதை போன்று மேலதிக மாவட்ட நீதிபதியிடம் வழக்கை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா குறிப்பிட்டார். ஏதாவதொரு தரப்பினர், யாதேனுமொரு நீதிபதி, ஏதாவதொரு வழக்கை விசாரிப்பது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில், அதனையும் பொருட்படுத்தாமல் அந்த நீதிபதியே அந்த வழக்கை விசாரித்தால், குறித்த நீதிபதி பக்கசார்பானவர் என்ற முடிவுக்கு வர முடியும் என இரண்டு தரப்பினரினதும் கருத்துக்களை செவிமடுத்த நீதிமன்றம் கடந்த 8 ஆம் திகதி அறிவித்தது. அந்த காரணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதானவிடம் மாற்றுவதாக நீதிபதி அறிவித்தார். அதன் பின்னர் மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் இந்த வழக்கு விசரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இதற்கு முன்னர் இலக்கம் - 01 நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜோர்ஜ் ஸ்ட்டூவர்ட் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததாக MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கோரியிருந்தார். அந்த கோரிக்கைக்கு தாம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்த எதிர்ப்பை இந்த நீதிமன்றத்திலும் வௌியிடுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா குறிப்பிட்டிருந்தார். கடந்த மாதம் 18 ஆம் திகதி இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது, இலக்கம் 01 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமையினால் இந்த நீதிமன்றத்தில் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாதெனவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பினரினதும் கருத்துக்களை கேட்டறிந்த மேலதிக நீதவான் வழக்கை இன்றைய தினம் வரை ஒத்திவைத்தார். இலக்கம் 06 நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் சதுன் விதான முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், முன்னர் தாம் தெரிவித்த ஆட்சேபனையை அவ்வாறே இன்றும் வௌியிடுகின்றீர்களா என நீதவான், MTV தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம் வினவினார். அதன்போது, MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இஹலஹேவா, தமது கடுமையாக ஆட்சேபனையை மன்றில் தெரிவித்ததுடன் முன்னர் தாம் வௌியிட்ட ஆட்சேபனையை அவ்வாறே வௌியிடுவதாகவும், அந்த ஆட்சேபனை தொடர்பிலான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் குறிப்பிட்டார். விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சதுன் விதான, இந்த வழக்கை தமது நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கவில்லையெனவும் அடுத்த கட்ட செயற்பாடுகளுக்காக வழக்கை இலக்கம் - 01 நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதாகவும் அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் எனவும், இந்த வழக்கை விசாரிப்பதற்கு தயார் எனவும் இலக்கம் 1 நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில், இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது தெரிவிக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பது தொடர்பில் ஆட்சேபனை இல்லையென ஜோர்ஜ் ஸ்டூவர்ட் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார். எனினும், தமது சேவை பெறுநரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்பதனால், எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கோரினார். அதன்படி, மாவட்ட நீதிபதி இந்த வழக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, சட்டத்தரணிகளான ஜீவந்த ஜயதிலக்க, நிரஞ்சன் அருள்பிரகாசம், தமித்த கருணாரத்ன, என்.கே. அஷோக்பரன், மியுரு இகலஹேவா உள்ளிட்ட மேலும் சில சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் படி முறைப்பாட்டாளர் தரப்பு மற்றும் முறைப்பாட்டு நிறுவனத்தின் தலைவரான திலித் ஜயவீரவின் உரிமைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் சட்டத்தரணி ருவந்த குரே ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஏனைய செய்திகள்