கட்சித் தலைவர்கள் இடையிலான கூட்டம் இன்று

பாராளுமன்ற நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்த தீர்மானம் இன்று 

by Staff Writer 13-01-2021 | 7:28 AM
Colombo (News 1st) பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று பிற்பகல் 02 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால், அது குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அதன்பிரகாரம் 31 பாராளுமன்ற உறுப்பினர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பாராளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்றும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறினார். இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணிய 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.