ஒரு தொகை பணம், தங்க நகைகளுடன் இருவர் கைது

ஒரு தொகை பணம், தங்க நகைகளுடன் இருவர் கைது

by Staff Writer 13-01-2021 | 11:21 AM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோடியே 26 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிககளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சந்தேக நபர்களில் ஒருவரின் வீட்டில் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உதவியாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட பணம், தங்க நகை ஆகியவற்றுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.