1000 ரூபா சம்பளம்: அரசாங்கத்தினால் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை மாத்திரமே எடுக்க முடியும் என்கிறார் உதய கம்மன்பில

by Bella Dalima 12-01-2021 | 5:11 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை மாத்திரமே எடுக்க முடியும் என அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கொடுப்பனவை தோட்ட நிறுவனங்களே வழங்க வேண்டும் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுத்தாலும் அதனை, தோட்ட நிறுவனங்களே வழங்க வேண்டும். தோட்ட நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் இறுதியாக கொள்கை ரீதியிலான தீர்மானத்தை மாத்திரமே எடுக்க முடியும் என உதய கம்மன்பில தெரிவித்தார். தொழில் அமைச்சும், தோட்ட நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து 1000 ரூபாவை வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சர் மிக விரைவில் இது தொடர்பிலான தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் உதய கம்மன்பில கூறினார்.