மீண்டும் போராட்டங்கள் வலுப்பெறலாம்: FBI எச்சரிக்கை

அமெரிக்காவில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெறலாம் - FBI எச்சரிக்கை

by Staff Writer 12-01-2021 | 9:26 AM
Colombo (News 1st) அமெரிக்காவில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெறும் சாத்தியமுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். அந்தவகையில், பதவியேற்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் வலுப்பெறும் சாத்தியமுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவரது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு 50 மாநிலங்களிலும் வொஷிங்டனிலும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்படடுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே , அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு வௌியே பதவிப் பிரமாணம் செய்வதற்கு தாம் பயப்படவில்லை என ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார். பதவியேற்பு நிகழ்வின் போது சுமார் 15000 பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இதேவேளை, அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ Facebook கணக்கின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கான திட்டம் எதுவும் இதுவரை இல்லை என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புகள் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடக கணக்குகள், கடந்த வாரம் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.