அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கைது

by Bella Dalima 12-01-2021 | 6:44 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் கொழும்பு விஜேராம பகுதியில் பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் சில மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு விஜேராம பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதன்போது, ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் முயற்சித்தபோது, அனுமதியின்றி அதற்கு இடமளிக்க முடியாது என பொலிஸார் அந்தத் தருணத்தில் உத்தரவிட்டனர். அதன் பின்னர் பிரதமரின் செயலாளர் காமினி செனரத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நான்கு மாணவர் பிரநிதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பமளிப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்