மன்னாரில் 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

by Staff Writer 11-01-2021 | 3:50 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 70 பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஐவருடன் தொடர்புகளை பேணிய 113 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். குறித்த 113 பேரில் 70 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாகவும் அவர்கள் அடுத்த வாரமே பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். உப்புக்குளம் பகுதியில் வர்த்தகராக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புகளை பேணியோர் அதாவது குறித்த வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவுக்கு சென்றவர்களை உடனடியாக சுகாதார பிரிவினரை தொடர்பு கொண்டு தங்களை PCR  பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.