by Staff Writer 11-01-2021 | 5:38 PM
Colombo (News 1st) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவைகள் நாளை (12) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தில் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனுடன் தொடர்புடைய கால அட்டவணை தற்போது வௌியிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்ன்டோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாளாந்தம் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில் சேவைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் வழமை போன்று முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்கிசை - காங்கேசன்துறை - யாழ்தேவி ரயில், கொழும்பு - காங்கேசன்துறை - உத்தரதேவி ரயில், கொழும்பு கோட்டை - பதுளை பொடிமெனிக்கே ரயில், கோட்டை - கண்டி, மருதானை - பெலிஅத்த, மாத்தறை - கொழும்பு உள்ளிட்ட ரயில் சேவைகள் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.