ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் தேடல்

ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியோர் தொடர்பில் ஆராய நடவடிக்கை

by Staff Writer 10-01-2021 | 7:02 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கடந்த 5ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததுடன் அதற்கடுத்த நாள் நுழைவாயிலுக்குள் பிரவேசித்து பின்னர் அங்கிருந்து வௌியேறியமையை படைக்கள சேவிதர் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, ரவூப் ஹக்கீமை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் ஆகியோரை அடையாளங்காணும் நோக்கில் பாதுகாப்பு கெமராவினூடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு அருகில் அமர்ந்திருந்த எதிர்கட்சி உறுப்பினர்கள், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியிருந்தனரா? இல்லையா? என்பது தொடர்பிலும் கண்காணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் கயந்த கருணாத்திலக்க ஆகியோருக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் ஆசனம் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தற்போது ஹிக்கடுவ சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தயாசிறி ஜயசேகரவை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, கடந்த 08 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் PCR பரிசோதனையை மேற்கொண்டார். இதன்போது, தனக்கு கொரோனா தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தனது ட்விட்டர் பதிவினூடாக அவர் தெரிவித்திருந்தார்.