சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் நீக்கம்

by Chandrasekaram Chandravadani 10-01-2021 | 5:37 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு முடக்கப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தின் கிரேண்ட்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நாளை (11) அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிக்கடமுல்லை பொலிஸ் பிரிவின் தூவ வத்தை பகுதி, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெடிகந்தை பகுதி மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவின் MC வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இந்தநிலையில், தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் ஏனைய பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலானது தொடர்ந்தும் அமுலிலிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.