அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல் 

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல் 

by Staff Writer 10-01-2021 | 2:14 PM
Colombo (News 1st) அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளை (11) முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
COVID - 19 தொற்று காரணமாக கடந்த காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கொரோனா தொற்றுடன் தற்போது, அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அமைச்சினால் தற்போது சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சுகாதார வழிமுறைகளின் கீழ், அனைத்து ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்பிலான நடவடிக்கைகளுடன், மக்களுக்கு தேவையான ஏனைய அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து ஊழியர்களையும் நாளை (11) முதல் கடமைக்கு அழைப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளுடனேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஊழியர்களில், கர்ப்பிணி தாய்மார்கள் இருப்பின் அவர்களை வாரத்திற்கு 3 நாட்களுக்கு சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
என கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.