by Staff Writer 09-01-2021 | 4:08 PM
Colombo (News 1st) உள்ளூர் சினிமாத்துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் திரைப்படத்துறை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.
திரையரங்கு உரிமையாளர்களின் மின்சாரக் கட்டணத்தை அலகிடும் போது, தொழில் வகை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு அக்கட்டணத்தை முன்னோக்கி கொண்டு செல்லல், பொழுதுபோக்கு வரியை ஈராண்டு காலத்திற்கு 5 வீதம் வரை குறைத்தல், விநியோகக் கட்டணங்களை நீக்குதல் அல்லது குறைத்தல், இது தொடர்பாக முடிவுகளை எடுக்க சிறப்புக் குழுவை நியமித்தல், திரைப்படத் தயாரிப்பிற்கு 4 அல்லது 6 வீத வட்டிக்கு அரச வங்கிகளிடமிருந்து கடன் வழங்கல், சலுகை அடிப்படையில் அரச மற்றும் அனைத்து ஊடகங்களிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்பன குறித்து மேற்படி சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த திட்டங்கள் தொடர்பில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.