சந்தைகளில் COVID பரிசோதனை: மூவருக்கு தொற்று உறுதி

மீன், மரக்கறி சந்தைகளில் COVID பரிசோதனை: மூவருக்கு தொற்று உறுதி

by Staff Writer 08-01-2021 | 3:15 PM
Colombo (News 1st) மீன் சந்தைகளை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலுள்ள மீன், மரக்கறி சந்தைகள், வாராந்த சந்தைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தை அண்மித்த பகுதிகளில் COVID பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். நேற்றைய தினம் களுத்துறை மற்றும் நுகேகொடை பகுதிகளில் உள்ள மீன் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது, சுமார் 130 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், அவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, மேலும் 03 கொரோனா மரணங்கள் நேற்று (07) பதிவாகின. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 525 பேர் நேற்று அடையாளங்காணப்பட்டனர். அவர்களில் 402 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், 93 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதனையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,780 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், தொற்றுக்குள்ளானோரில் மேலும் 638 பேர் நேற்று குணமடைந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் COVID தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,661 ஆக உயர்வடைந்துள்ளது. எவ்வாறாயினும், 6900 பேர் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.