நல்லெண்ணத்துடன் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு வழங்கப்படும்: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 07-01-2021 | 7:59 PM
Colombo (News 1st) நல்லெண்ணத்துடன் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்காது, அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பை வழங்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மக்களுக்கு சேவையாற்றியமையால், நாட்டின் அரச அதிகாரிகளை சிறையில் அடைத்த பாரிய துரோகத்தை நல்லாட்சி அரசாங்கம் செய்ததாக பிரதமர் கூறினார். ''கிராமத்துடன் கலந்துரையாடல் - செயற்றிட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு'' வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளைத் தௌிவுபடுத்தும் விசேட நிகழ்விலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.