தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜெய்சங்கர்

by Staff Writer 07-01-2021 | 8:33 PM
Colombo (News 1st) இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைகள் தொடர்பில் கலந்துரையாடியதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் இன்று இந்திய வௌிவிவகார அமைச்சரை கொழும்பில் சந்தித்தனர். இதன்போது, பெருந்தோட்டத்துறையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்திய வௌிவிவகார அமைச்சரை இன்று சந்தித்துள்ளனர். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், மாகாண சபைகள் தொடர்பாக இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என இந்த சந்திப்பின் போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.