ட்ரம்பின் ஆதரவாளர்கள் செனட் சபைக்குள் பிரவேசம்

செனட் சபை கட்டட தொகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் 

by Staff Writer 07-01-2021 | 7:02 AM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், செனட் சபையின் கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதன் காரணமாக செனட் சபை கூட்டமும் இடைநிறுத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. போராட்டக்காரர்கள் ஜன்னல்களை உடைத்தும், கட்டிடத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தும் செனட் சபை கட்டிடத்தொகுதியின் கெப்பிட்டல் ஹில் தொகுதிக்கு சேதம் விளைவித்துள்ளனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் பெண்ணொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தலைநகரின் பாதுகாப்பிற்காக சுமார் 2,700 இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வொஷிங்டன் டிசியில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே இந்த கலவரங்கள் தொடர்பிலான தகவல்கள் பகிரப்படுவதை சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தியுள்ளன. அமைதியின்மை தொடர்பிலான காணொளிகளை நீக்குவதாக யூடியூப் தளம் அறிவித்துள்ளது. அமைதியின்மையை மேலும் தூண்டும் வகையிலான கருத்துக்களை நீக்குவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கினை 12 மணித்தியாலங்களுக்கு முடக்குவதற்கு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் பதிவிட்ட 3 பதிவுகளை நீக்குமாறும் அவ்வாறில்லையெனின், நிரந்தரமாக ஜனாதிபதியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஜனாதிபதி தனது மூன்று ட்விட் பதிவுகளையும் அகற்றியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் ட்வீட் பதிவொன்றே இந்த அமைதியின்மைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது்.