மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 06-01-2021 | 10:19 PM
Colombo (News 1st) நாட்டில் இரண்டு கொரோனா மரணங்கள் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது. தெஹிவளையை சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவர் COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டதுடன், இன்று அவர் உயிரிழந்துள்ளார். சிறுநீரக பாதிப்பு மற்றும் COVID-19 நிமோனியாவின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதேவேளை, அலவ்வ பகுதியை சேர்ந்த 78 வயதான பெண்ணொருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா நோயாளராக அவர் அடையாளம் காணப்பட்ட பின்னர், நாரம்மல மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் COVID-19 தொற்றினால் இவர் இன்று உயிரிழந்துள்ளார். இதேவேளை, கொவிட் -19 தொற்றுக்குள்ளான மேலும் 252 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 46,248 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 7006 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 39,023 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.