துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது தொடர்பான வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

by Staff Writer 06-01-2021 | 5:16 PM
Colombo (News 1st) துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி, பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். துறைமுக சேவை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். துறைமுகங்கள் அதிகார சபையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு எவ்வித அவசியமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல சபையில் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாட்டிற்கு விற்பனை செய்கின்றமைக்கு தமது கண்டனத்தை வௌியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆகவே, தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகவே துறைமுகங்கள் சேவையை அத்தியாவசிய சேவையாக்க முயற்சிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதில்லை என கூறிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, COVID காலப்பகுதியில் 39 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டமையால், துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த விடயத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.