by Staff Writer 06-01-2021 | 2:58 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற நோயாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரச்சிக்கட்டு - ஆணைவிழுந்தான் பகுதியில் வைத்து 52 வயதான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அந்நபர் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹன கூறினார்.
கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து ஐவர் அண்மையில் தப்பிச்சென்றனர்.
அவர்களில் ஒருவர் மாதம்பை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
தப்பிச் சென்ற ஏனைய மூவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
22, 23, 26, 32 மற்றும் 52 வயதான இவர்கள் சிகிச்சை நிலையத்திலிருந்து கடந்த 31 ஆம் திகதி தப்பிச்சென்றிருந்தனர்.
ஒருவர் முன்னதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏனைய மூவரை பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.