வாக்காளர்களை அழைத்துச்சென்ற வழக்கு விசாரணை

இடம்பெயர்ந்த வாக்காளர்களை சிலாபத்துறைக்கு அழைத்துச்சென்ற வழக்கு: மூன்றாவது சந்தேகநபருக்கு பிணை

by Staff Writer 06-01-2021 | 5:37 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தல் காலத்தில் புத்தளத்தில் இருந்து 12,000 இடம்பெயர்ந்த வாக்காளர்களை சிலாபத்துறைக்கு அழைத்துச்சென்றமை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான கணக்காளர் அழகரத்னம் மனோ ரஞ்சன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரச வளங்களை பயன்படுத்தி வாக்காளர்களை பஸ்களில் அழைத்துச்சென்றமையால் அரசாங்கத்திற்கு 99.5 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான மனோ ரஞ்சன் சார்பில் ஏற்கனவே பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், பொதுச்சொத்துகள் வழக்கில் விசேட காரணங்கள் இன்றி அவரை விடுவிக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மெகசின் சிறைச்சாலையில் மோசமான முறையில் COVID தொற்று பரவி வருவதாகவும் அங்கு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதையும் சுட்டிக்காட்டி சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு மீண்டும் ஒரு பிணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை பரிசீலித்த கோட்டை நீதவான், கொரானா நிலைமையை, விசேட காரணியாகக் கொண்டு சந்தேகநபரான கணக்காளர் அழகரத்னம் மனோ ரஞ்சனை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்துள்ளார்.