முகக்கவசம் அணியாத 300 பேருக்கு PCR பரிசோதனை; இருவருக்கு தொற்று உறுதி

by Staff Writer 05-01-2021 | 8:39 PM
Colombo (News 1st) முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌி பேணாமை தொடர்பில் கைது செய்யப்படுவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கமைய, இன்று முதற்தடவையாக பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பேலியகொடை பகுதியில் சமூக இடைவௌியை பேணாத, முகக்கவசம் அணியாதவர்கள் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, சுமார் 50 பேரிடம் PCR மாதிரிகள் பெறப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். பேலியகொடை மீன் விற்பனை நிலையம் மற்றும் மெனிங் சந்தை கட்டடத் தொகுதிக்கு அருகில் முகக்கவசம் அணியாதிருந்தவர்களும் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். முல்லேரியா, தலங்கம, களனி பகுதிகளில் வீதிகளில் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவௌியைப் பேணாமலும் நடமாடியவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்தனர். இந்தச் சோதனை நடவடிக்கையின் போது சுமார் 300 பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.