கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 05-01-2021 | 10:13 AM
Colombo (News 1st) இன்று (05) காலை வரையான 24 மணி நேரத்திற்குள் நாட்டில் புதிதாக 468 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவராவார். ஏனைய தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 183 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 72 பேரும் கண்டி மாவட்டத்தில் 73 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 நபர்களும் அம்பாறை மாவட்டத்தில் 07 பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் 07 நபர்களும் யாழ். மாவட்டத்தில் 06 நபர்களும் வவுனியா மாவட்டத்தில் இருவரும் திருகோணமலை மாவட்டத்தில் 08 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவரும் கடந்த 24 மணி நேரத்திற்குள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் கொம்பனித்தெரு பிரதேசத்தில் 27 பேர், கொள்ளுப்பிட்டியில் 12 பேர், பொரளை பகுதியில் 12 பேர், தெமட்டகொடை பிரதேசத்தில் 11 நபர்கள், மருதானையில் நால்வர், புளூமென்டல் பிரதேசத்தில் 06 பேர், மட்டக்குளி பகுதியில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவத்தை பிரதேசத்தில் இருவரும் நீர்கொழும்பு பகுதியில் 12 நபர்களும் வத்தளை பிரதேசத்தில் இருவரும் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 72 பேருள் அடங்குகின்றனர். புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை பகுதியிலே ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அம்பாறையில் ஐவர் மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் மூவர், காத்தான்குடி பிரதேசத்தில் மூவர் அடங்கலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் மூவரும் கந்தளாயில் ஐவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் மூவர், மானிப்பாய் பகுதியில் இருவர், பருத்தித்துறையில் ஒருவர் அடங்கலாக யாழ். மாவட்டத்தில் 06 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் இதுவரையில் 45,242 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 37,817 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் (04) இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர். இதனையடுத்து, நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. உக்ரைனிலிருந்து மேலும் 97 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ள அதேநேரம், கடந்த 28ஆம் திகதி வருகை தந்திருந்தவர்களுள் 27 பேர் நாடு திரும்பியுள்ளனர். இதேநேரம், கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 164 பேர் இன்று (05) காலை நாடு திரும்பியுள்ளனர். நாட்டிலுள்ள 79 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4,945 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 12,826 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.