இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று நாட்டிற்கு வருகை

இந்திய வௌிவிவகார அமைச்சர் இன்று நாட்டிற்கு வருகை

by Staff Writer 05-01-2021 | 8:03 AM
Colombo (News 1st) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் இன்று (05) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் உயர்மட்ட வௌிநாட்டு தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்திய வௌிவிவகார அமைச்சரின் இந்த வருடத்திற்கான முதலாவது உத்தியோகபூர்வ வௌிநாட்டு பயணமாகவும் இது அமைந்துள்ளது. மேலும், இந்த விஜயத்தின் மூலம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் கொவிட் நிலைமை காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எயார் பபள் முறைமைக்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.