குடும்ப தகராறில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு

குடும்ப தகராறின் போது ஏற்பட்ட கைகலப்பில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு 

by Staff Writer 04-01-2021 | 2:46 PM
Colombo (News 1st) அக்கரைப்பற்று - அட்டாளைச்சேனை மற்றும் மாத்தறை - வலஸ்முல்லை ஆகிய பகுதிகளில் சிறுவர்களுக்கு எதிரான கொடூர செயற்பாடுகளினால் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிரான தேசிய தினம் இன்று (04) நினைவுகூரப்படும் நிலையில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அம்பாறை - அட்டாளைச்சேனை பகுதியில் நேற்று (03) மாலை ஏற்பட்ட கைகலப்பில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது சகோதரியின் கணவருக்கும் குறித்த சிறுவனுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுவனின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாத்தறை வலஸ்முல்லை ஓமாரே பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த 13 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறுவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கிடைத்த முறைப்பாட்டிற்கு இணங்க விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலஸ்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.