by Staff Writer 03-01-2021 | 2:41 PM
Colombo (News 1st) சோளம் உள்ளிட்ட 6 வகை பயிர்களில் இந்த வருடத்தில் தன்னிறைவு அடைய முடியும் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சோளம், மரமுந்திரிகை, எள்ளு, கௌப்பி, பாசிப்பயறு மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களின் அறுவடையானது இம்முறை உள்நாட்டின் தேவைக்கு போதுமானது என விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M. வீரகோன் தெரிவித்துள்ளார்.
பெரும் போகம் மற்றும் சிறுபோகத்தில் இவை உற்பத்தி செய்யப்படுவதுடன் உற்பத்தியின் அளவை மேலும் அதிகரிப்பதனூடாக இந்த செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.
சோளத்திற்கான வருடாந்த தேவை 5 இலட்சம் மெட்ரிக் தொன்னாக காணப்படுவதுடன், இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஹெக்டேயரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
படைப்புழுவின் தாக்கம் காணப்படுகின்ற போதிலும், அதனால் 5 வீதமான பாதிப்பே ஏற்படும் எனவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இம்முறை சோள பயிர்ச்செய்கையின் மூலம், 4 இலட்சம் மெட்ரிக் தொன் அறுவடையை எதிர்பார்ப்பதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய பயிர்களிலும் குறிப்பிடத்தக்களவு அறுவடை கிடைத்துள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் இந்த திட்டத்தை தொடர்ந்தும் மேற்கொள்வதாகவும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M. வீரகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பயிரிப்பட்டுள்ள 16 வகை பயிர்களின் இறக்குமதி இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை நாட்டில் பயிரிடுவதற்கான பாரியளவு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.