கற்குவாரி திருட்டு: கைதானவர்களுக்கு விளக்கமறியல்

கற்குவாரியில் வெடிபொருட்கள் திருட்டு: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 03-01-2021 | 3:16 PM
Colombo (News 1st) மாவனெல்லை ஹிகுல மொல்லிகொட பகுதியில் கற்குவாரியிலிருந்து வெடிபொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மூவரும் மாவனெல்லை நீதவான் முன்னிலையில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டனர். 22 ஆம் திகதி பதிவாகிய திருட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர். கற்குவாரியிலிருந்து திருடப்பட்ட வெடிபொருட்கள், பேராதனை தலவத்த பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்திற்கும் கடும்போக்குவாதம், பயங்கரவாதம் அல்லது அவ்வாறான அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பொருட்கள் வேறொரு கற்குவாரியை சேர்ந்தவருக்கே விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.