உக்ரைனிலிருந்து மேலும் 173 சுற்றுலாப் பயணிகள் வருகை

by Staff Writer 02-01-2021 | 7:24 PM
Colombo (News 1st) உக்ரைனிலிருந்து மேலும் 173 சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனிடையே, உக்ரைனிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழுவினர், இன்று சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டனர். ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் சுற்றுலா பயணிகளுடன் இணைந்துகொண்டார். உக்ரைனிலிருந்து 180 பேர் அடங்கிய சுற்றுலா பயணிகள் கடந்த 28 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர். இவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த சுற்றுலா பயணிகள் சமூகத்துடன் தொடர்பை பேணுவதில்லை என்பதால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.