ஆசிரியர் சேவையில் 3,772 பேர் விரைவில் இணைப்பு

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேருக்கு விரைவில் நியமனம்

by Staff Writer 02-01-2021 | 3:21 PM
Colombo (News 1st) ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேரை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்களை அவர்களின் வீடுகளுக்கே அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பீ.கே.எஸ்.சுபோதிகா குறிப்பிட்டார். எதிர்வரும் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு முன்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் என அவர் கூறினார். புதிய நியமனங்கள் வழங்கப்படும் ஆசிரியர்களில் 1000 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அனைவரும் மாகாண பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் இறுதி ஆண்டு பரீட்சையில் பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.