பிறந்த சிசுவை புதைத்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது

யாழில் பிறந்த சிசுவை புதைத்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது 

by Staff Writer 01-01-2021 | 6:37 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழி தோண்டி புதைத்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிசுவின் பாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கொழும்புத்துறை - கணக்கர்கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (31) அதிகாலை பிறந்த சிசு புதைக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார். பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அதிக குருதிப்போக்கு காரணமாக குறித்த தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குழந்தை பிறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி, திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் இணைந்து சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிசுவின் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். சிசுவின் தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.