by Staff Writer 31-12-2020 | 6:02 PM
Colombo (News 1st) நுவரெலியா - லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜனத் அபேகுணரத்ன குறிப்பிட்டார்.
250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 10 பேருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டுக்கலை, தங்ககலை, மவுசால்ல, டயகம மூன்றாம் பிரிவு, கிளனிக்கல், ஊட்டுவில் ,கௌலினா ஆகிய பகுதிகளுக்கு மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
05 ஆண்களுக்கும் 04 பெண்களும் 5 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 706 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,329 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 42,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 7174 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 199 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.