மோடி இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்

மோடி இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்: T.R.பாலு வலியுறுத்தல்

by Staff Writer 31-12-2020 | 5:07 PM
Colombo (News 1st) ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் 'மாகாண ஒழிப்பு' திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், அது, இந்திய - இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தி.மு.க பொருளாளர் T.R.பாலு வலியுறுத்தியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும் பாராளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான T.R.பாலு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையின் மாகாண சபை முறைமை குறித்து பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளளன. ஈழத் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிட, தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அதே உள்நோக்கத்துடன், 'இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும்' என்று இலங்கை அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என T.R.பாலு குறிப்பிட்டுள்ளார். 'ராஜபக்ஸ சகோதரர்கள்' புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத் தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதத்திலும், எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது எனவும் டி.ஆர் பாலு சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவுடனான உடன்படிக்கை மதிக்கப்படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற நெருக்கடியான நேரத்தில் கூட, வெளியுறவுத்துறை அமைச்சரோ, அண்மையில் இலங்கைக்கு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரோ, பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.