பெப்ரவரி இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முயற்சி

by Staff Writer 31-12-2020 | 8:40 PM
Colombo (News 1st) பெப்ரவரி மாத இறுதிக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார். எதிர்வரும் சில நாட்களில் நாட்டிற்கு கொண்டுவரப்படும் தடுப்பூசி தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி குறித்து விரிவான பரிசீலனையின் பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான வழிமுறைகளை ஏற்படுத்தும் அதிகாரம் லலித் வீரதுங்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அது சார்ந்த ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள தடுப்பூசி எதுவென இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. ஏனைய நாடுகள் தடுப்பூசியை அனுமதிக்கும் முறைமையைக் கவனத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபயின் ஆலோசகர் லலித் வீரதுங்க கூறினார். ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட Sputnik-v, சீனாவில் தயாரிக்கப்பட்ட Sinovac மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் கண்டுபிடித்த Astrazeneca ஆகிய மூன்று தடுப்பூசிகள் இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் இதற்கு முன்பு தெரிவித்திருந்தார். தற்போதைக்கு இந்தியாவின் ஐந்து உற்பத்திச்சாலைகளில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழம் கண்டுபிடித்த Astrazeneca தடுப்பூசியின் தயாரிப்புகள் ஆரப்பிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.