கொரோனா தொற்றுக்குள்ளான 5 கைதிகள் தப்பியோட்டம் 

கொரோனா தொற்றுக்குள்ளான 5 கைதிகள் தப்பியோட்டம் 

by Staff Writer 31-12-2020 | 8:52 AM
Colombo (News 1st) பொலன்னறுவை - கல்லேல்ல COVID - 19 சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இன்று (31) அதிகாலை இவர்கள் ஐவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் ஐவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கல்லேல்ல கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 22, 23, 26, 32 மற்றும் 52 வயதானவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718 591 233 என்ற இலக்கத்தினுடாக பொலன்னறுவை தலைமையக பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு அல்லது 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.