கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற 5 கைதிகளில் ஒருவர் பிடிபட்டார்

by Staff Writer 31-12-2020 | 7:31 PM
Colombo (News 1st) பொலன்னறுவை - கல்லெல்ல கொரோனா மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற ஐந்து சந்தேகநபர்களில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். COVID தொற்றுக்குள்ளான ஐந்து பேரும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர். கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இவர்கள் கடந்த வாரம் கல்லெல்ல தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் ஐவரும் இன்று அதிகாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து தப்பித்து பொலன்னறுவையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் குருநாகல் வரை பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று மாலை அவர்களில் ஒருவர் மாதம்பை - தெமட்டபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தப்பிச்சென்ற தொற்றுக்குள்ளானவர் தனது உறவினரின் வீட்டில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.