Pfizer தடுப்பூசி போட்டுக்கொண்ட தாதிக்கு கொரோனா

அமெரிக்காவில் Pfizer தடுப்பூசி போட்டுக்கொண்ட தாதிக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 31-12-2020 | 3:43 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் Pfizer தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட தாதி ஒருவருக்கு தடுப்பூசி போட்ட ஒரு வாரத்தின் பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிப்பதில் 95 சதவீதம் செயற்திறன் கொண்ட Pfizer நிறுவனத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் வயதில் மூத்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், Pfizer தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட தாதி ஒருவருக்கு தடுப்பூசி போட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மேத்யூ என்ற 45 வயதான தாதி கடந்த 18 ஆம் திகதி தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டார். தடுப்பூசி போட்டதால் கையில் ஒரு புண் ஏற்பட்டதைத் தவிர வேறு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பிறகு மேத்யூவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இந்த சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.