மஹர சிறைச்சாலை கலவரம்: ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

மஹர சிறைச்சாலை கலவரம்: ஆய்வறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிப்பு

by Staff Writer 30-12-2020 | 5:54 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவினால் நீதி அமைச்சில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி U.R.D. சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன ஹப்புகஸ்வத்த, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் D.R.L.ரணவீர ஆகியோர் இதன்போது நீதி அமைச்சில் பிரசன்னமாகியிருந்தனர். மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குழுவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.