சவுதியில் பெண் செயற்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

சவுதியில் மாற்றத்தை வலியுறுத்திய பெண் செயற்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

by Bella Dalima 30-12-2020 | 4:42 PM
Colombo (News 1st) சவுதி அரேபியாவில் மாற்றத்தை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்த பெண் செயற்பாட்டாளர் லுஜேன் அல் ஹத்லூலுக்கு 5 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய நீதிமன்றம், அவருக்கான தண்டனையை 2 ஆண்டுகள் 10 மாதங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டடை ஆழமான சங்கடத்தை தருவதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பெண் செயற்பாட்டாளர் தடுப்புக்காவல் என்ற பெயரில் இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார். சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் உரிமைக்கான கோரிக்கையை எழுப்பிய அந்நாட்டின் பிரபல செயற்பாட்டாளர்களில் குறிப்பிடத்தக்கவர் லுஜேன் அல் ஹத்லூல். 31 வயதான ஹத்லூல், 2018 ஆம் ஆண்டில், அரசுக்கு எதிரான அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரது விடுதலையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சவுதி அரேபிய சிறப்பு குற்றவியல் நீதிமன்றம், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு ஆதரவாக செயற்படல் உள்ளிட்ட ஹத்லூல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானதாகக் கூறி அவருக்கு தண்டனை விதித்து திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை, ஹத்லூல் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளனர். சிறையில் ஹத்லூல் சித்ரவதை செய்யப்பட்டதாக அவர்கள் முறையிட்டனர். ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமையைப் பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், 2018 ஆம் ஆண்டில் ஹத்லூல் கைது செய்யப்பட்டார். ஆனால், அதற்கும் ஹத்லூல் தடுத்து வைக்கப்பட்ட வழக்கிற்கும் தொடர்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.