Colombo (News 1st) நேற்றைய தினம் (28) முதல் இன்று (29) காலை வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் 549 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது.
இவர்களில் 19 நபர்கள் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.
ஏனைய 530 தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 237 பேர், கம்பஹா மாவட்டத்தில் 124 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர், அம்பாறை மாவட்டத்தில் 19 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 06 பேர், திருகோணமலை மாவட்டத்தில் ஒருவர் மற்றும் பதுளை மாவட்டத்தில் ஒருவர் கடந்த 24 மணி நேரத்தில் அடையாளம் காணப்பட்டோரில் அடங்குகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தின் தெமட்டகொடை பிரதேசத்தில் 121 பேரும் கிருலப்பனை பகுதியில் 23 பேரும் வௌ்ளவத்தை பகுதியில் 18 பேரும் பம்பலப்பிட்டியில் 08 பேரும் கொள்ளுப்பிட்டி பகுதியில் 09 பேரும், மருதானையில் 14 பேரும் கிரேண்ட்பாஸ் பகுதியில் நால்வரும் மட்டக்குளி பகுதியில் ஐவரும் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
மஹர பகுதியில் 35 நபர்கள், நீர்கொழும்பு பிரதேசத்தில் 11 பேர், வத்தளையில் ஒருவர் உள்ளடங்கலாக கம்பஹா மாவட்டத்தில் 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தமாக 41,603 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 33,221 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் களுத்துறை தெற்கு, தர்காநகர் மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் 03 கொரோனா மரணங்கள் பதிவாகின.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அபுதாபி, கத்தார் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 108 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்தவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 12,236 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.