668 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

668 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்...

by Chandrasekaram Chandravadani 28-12-2020 | 2:57 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (27) முதல் இன்று (28) காலை வரையான காலப் பகுதியில் நாட்டில் புதிதாக 674 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. இவர்களில் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 06 பேர் உள்ளடங்கும் நிலையில், ஏனைய 668 நபர்களும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 174 நபர்களும் கம்பஹா மாவட்டத்தில் 153 பேரும் கண்டி மாவட்டத்தில் 52 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவரும் அம்பாறையில் 05 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 26 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 08 பேரும் இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர். வெலிக்கடை சிறைச்சாலை கைதி ஒருவர், மஹர சிறைச்சாலை கைதிகள் 40 பேர் மற்றும் நீர்கொழும்பு சிறைக்கைதிகள் 14 பேர் இதில் அடங்குகின்றனர். கொழும்பு மாவட்டத்தின் அவிசாவளை பிரதேசத்திலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தின் கொம்பனித்தெரு பிரதேசத்தில் நால்வர், வௌ்ளவத்தையில் ஐவர், கறுவாத்தோட்டம் பகுதியில் 07 பேர், தெமட்டகொடையில் 18 பேர், மருதானையில் 20 நபர்கள், புளூமென்டல் பகுதியில் ஐவர், கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் மூவர், மட்டக்குளி பகுதியில் 08 பேர், அவிசாவளை பகுதியில் 26 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களுள் உள்ளடங்குகின்றனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர பகுதியில் 40 பேரும் நீர்கொழும்பு பகுதியில் 14 பேரும் பூகொடை பகுதியில் 35 பேரும் வத்தளையில் மூவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மொத்தமாக 41, 054 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 32,701 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியதை அடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. வவுனியா, கடவத்தை, புறக்கோட்டை மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் 04 கொரோனா மரணங்களும் பதிவாகியிருந்தன. வட மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.