ஜனவரி முதல் திரையரங்குகள் மீள திறப்பு

ஜனவரி முதல் திரையரங்குகளை மீள திறக்க பிரதமர் ஆலோசனை 

by Staff Writer 27-12-2020 | 1:51 PM
Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் திரையரங்குகள் மீள திறக்கப்படவுள்ளன. சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாடளாவிய ரீதியிலுள்ள திரையரங்குகளை மீள திறப்பதற்கு பிரதமரும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் ஜனவரி முதலாம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளமையினால், கலைக்கும் கலைஞர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் திரைப்பட கண்காட்சியாளர்கள் சங்கம் உள்ளிட்ட கலைஞர்கள் பலர் அண்மையில் பிரதமருக்கு அறிவுறுத்தியிருந்தனர். அதன் பிரதிபலனாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து திரையரங்குகள் மீள திறக்கப்பட வேண்டும் என பிரதமர் ஆலோசனை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை திறக்கும் போது குறித்த திரையரங்குகள் உரிய முறையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்படங்களை பார்வையிடுவதற்கு திரையரங்குகளுக்கு வருகை தருவோரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.