தேவாலய வளாகங்களில் விசேட பாதுகாப்பு

தேவாலய வளாகங்களில் விசேட பாதுகாப்பு

by Staff Writer 25-12-2020 | 1:51 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலய வளாகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய அனைத்து தேவாலய வளாகங்களிலும் பாதுகாப்பு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்களூடாக பொலிஸ் மா அதிபரின் பரிந்துரை செயற்படுத்தப்படுவதாக அவர் கூறினார். இந்த விசேட வேலைத்திட்டம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நத்தார் பண்டிகை கொண்டாட்டங்களில் போது எவ்வித இடையூறும் இன்றி, சுகாதார வழிமுறைகளுடன் தேவாலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.