சுற்றுலாப் பயணிகளுக்கான ஆலோசனை கோவை வௌியீடு

சுற்றுலாப் பயணிகளுக்கான ஆலோசனை கோவை வௌியீடு

by Staff Writer 25-12-2020 | 7:07 PM
Colombo (News 1st) இந்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள பரீட்சார்த்த சுற்றுலா திட்டத்தின் கீழ், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது. இதற்கமைய, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் COVID - 19 காப்புறுதியை பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும். ஹோட்டலை பதிவு செய்யும்போது அல்லது விமான டிக்கெட்டை கொள்வனவு செய்யும்போது காப்புறுதியை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விமான நிலையங்களுக்கு புறப்படுவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர், இந் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கூடங்களில் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்து 2  வார கால பகுதிக்குள் 3 PCR பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதுடன் அவையனைத்தும் ஒரே மருத்துவ கூடத்தினால் நடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் மாத்திரம் தங்குவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. முதல் 02 வாரங்களில் சுதந்திரமாக நடமாட தடை விதிக்கப்படும் அதேவேளை, ஹோட்டலில் இருந்து வௌியில் செல்லவும் ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.