குழந்தைகளைக் கடத்தி விற்றவர் மாத்தளையில் கைது

30 குழந்தைகளைக் கடத்தி விற்றவர் மாத்தளையில் கைது

by Bella Dalima 22-12-2020 | 4:59 PM
Colombo (News 1st) சுமார் 30 குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்த ஒருவர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். அதற்கமைய, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கர்ப்பிணி தாய்மார்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். இவர்களில் 5 தாய்மார்களின் குழந்தைகளை மூன்றாம் தரப்பினருக்கு பணத்திற்காக ஏற்கனவே விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணையின் போது சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மொரட்டுவையிலிருந்து குழந்தைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மாத்தளை - உக்குவல பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.