Colombo (News 1st) நாட்டில் நேற்று (21) முதல் இன்று (22) காலை வரையில் 370 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 06 பேர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர்.
எஞ்சிய 364 தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான செயலணி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 101 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 67 பேரும் கண்டி மாவட்டத்தில் 25 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அம்பாறை மாவட்டத்தில் 23 பேரும் புத்தளம் மாவட்டத்தில் 05 பேரும் யாழ். மாவட்டத்தில் 03 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் இருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
இரத்மலானையில் 43 பேர், பொரளை பிரதேசத்தில் 06 பேர், கிருளப்பனையில் 03 பேர், மருதானையில் ஒருவர், புளூமென்டல் பகுதியில் 05 பேர், கிரேண்ட்பாஸ் பிரதேசத்தில் 06 பேர், மட்டக்குளியில் 04 பேர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டோரில் கடவத்தை பகுதியில் ஒருவரும் களனியில் ஒருவரும் வத்தளை பகுதியில் 11 பேரும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 37,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 28,682 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் உள்ள 72 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,473 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
நேற்றைய தினம் (21) 13,860 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகியதை அடுத்து, இதுவரை பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 181 ஆகியது.
வௌிநாடுகளிலிருந்து 112 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ள நிலையில், மேலும் 437 பேர் நாட்டிற்கு வருகை தரவிருப்பதாகவும் COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.