5 கோடி ரூபா பணம் மற்றும் ஹெரோயினுடன் மூவர் கைது 

by Staff Writer 20-12-2020 | 4:13 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து சுமார் 5 கோடி ரூபா பணம் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் கடுவளை, வெலிவிட்ட மற்றும் மாலம்பே பகுதிகளில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த சுற்றிவளைப்புகளின் போது பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் கடுவளை மற்றும் தலங்கம - பத்தரமுல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் 37 வயதான பெண் நுகேகொடை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபராக கருதப்படும் ஹேவாகம பகுதியை சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 5 கோடியே 90 இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டமை இதுவே முதற்தடவையாகும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.