மழையுடனான வானிலை தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

மழையுடனான வானிலை தொடர்பில் விசேட அறிவுறுத்தல்

by Staff Writer 20-12-2020 | 1:51 PM
Colombo (News 1st) நாடு முழுவதும் வட கீழ் பருவப்பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக அதிகரிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை, காலி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் நேற்று முதல் மழை பெய்து வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று (20) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழை வீழ்ச்சி, பதியத்தலாவ பகுதியில் பதிவாகியுள்ளது. பதியத்தலாவ பகுதியில் 126 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.