சில பிரதேசங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

by Staff Writer 20-12-2020 | 4:52 PM
Colombo (News 1st) நாட்டில் 03 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகள், மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மத்திய மாகாணத்திலும் பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு கரை பகுதியிலும் வடக்கு, வட மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசுமென திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், இடி மின்னல் தாக்கங்களிலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. யாழ். குடாநாட்டில் பெய்த தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்தோடாமையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை யாழ் - வலிகாமம் வடக்கு - சேந்தான்குளம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் வௌ்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் - தோப்பூர் பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பகுதியிலுள்ள 05 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்த  பிரதேசங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் இன்று சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளார். மேலும் கிண்ணியா பிரதேசகத்தின் இடிமன், காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, அரை ஏக்கர், ஆலங்கேணி ஆகிய பகுதிகளே வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.