சர்ச்சைக்குரிய எண்ணெய் குழாய் திட்டம் ஜனாதிபதியின் உத்தரவால் நிறுத்தம்

by Staff Writer 20-12-2020 | 8:08 PM
Colombo (News 1st) 15 பில்லியன் ரூபா செலவில் எண்ணெய்க் குழாய் கட்டமைப்பை நிர்மாணிக்கும் சர்ச்சைக்குரிய திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது. புளூமென்டல் பகுதியில் இருந்து கொலன்னாவை வரை இந்த குழாய் கட்டமைப்பு அமைக்கப்படவிருந்தது. இந்த திட்டம் இரத்து செய்யப்படுகின்றமை தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி த சன்டே ஐலன்ட் பத்திரிகை இன்று (20) செய்தி வௌியிட்டுள்ளது. இந்த எண்ணெய் குழாய் கட்டமைப்பு 2013 ஆம் 2014 ஆம் வருடங்களில் பிரேரிக்கப்பட்டாலும் முத்துராஜவெல எண்ணெய் தாங்கிகள் தொகுதி அமைக்கப்பட்டதை அடுத்து அது தடைப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டுமொரு முறை இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கப்பட்டாலும் இதன்மூலம் பெருந்தொகை பணம் வீண் விரையம் ஆவதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். ஏற்கனவே LNG மின் உற்பத்தி நிலையங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்புலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளதாக த ஐலன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.