தனிமைப்படுத்தல் விதியை மீறி பயணித்த பஸ் கைப்பற்றல்

பொரளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிலரை ஏற்றிச்சென்ற பஸ் பொலிஸாரால் கைப்பற்றல்

by Staff Writer 19-12-2020 | 3:48 PM
Colombo (News 1st) கொழும்பு - பொரளையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிலரை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று தெற்கு அதிவேக வீதியில் மத்தளை வௌியேறும் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் 51 பேர் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய பஸ்ஸின் சாரதி, நடத்துனர் மற்றும் பஸ் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். 119 என்ற பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மத்தளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த பஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் குறித்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். பொரளை மற்றும் மட்டக்குளி பேர்கியூஷன் வீதி பகுதிகளை சேர்ந்தவர்களும் பஸ்ஸில் பயணித்துள்ளனர். மத்தளை பகுதியில் கைப்பற்றப்பட்ட பஸ் மீண்டும் பொரளை பொலிஸ் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் பயணித்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து எவரும் வௌி பகுதிகளுக்கு செல்ல முடியாது எனவும், அவ்வாறு செல்வோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.